கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

விதுஷனின் படுகொலையால் வெளிக்காட்டப்பட்ட ஜனநாயக பிரச்சாரத்தின் வெற்றிடம்

அசங்க அபேரத்ன

பொலிஸ் காவலின் போது சித்திரவதை மற்றும் படுகொலைக்காளாவது இப்போது பொதுவானதாகிவிட்டது. இங்குள்ள சோகம் என்னவென்றால், இந்த நிகழ்வுகள் வேறு பல சம்பவங்களுடன் விரைவாக எதிரொலிக்கின்றதுடன், ஜனநாயகம் மற்றும் தனிமனித உரிமைகள் பற்றிய பிரச்சாரம் பெரும்பாலும் அதனை இழக்கிறது. பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலக குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து கொலைகளும் மறைக்கப்பட்ட ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்களின் மீதான சோதனைகளின் போது தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியமை என்ற தர்க்கத்தால் நியாயப்படுத்தப்பட்டன. அதே விடயத்தை ஊடகங்களின் முன்னிலையில் மீண்டும் சொல்வதென்பது  பொய்யைத் தாண்டிய ஒன்றாகும். இதேபோன்ற கொலைகள் சாதாரணமாக தொடரும் என்பது மறைக்கப்பட்ட செய்தியாகும். மறுபுறம், காவலில் உள்ள சந்தேக நபர்கள் அல்லது குற்றவாளிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கருதினாலும், தீர்ப்புகள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை பொலிஸ் தக்க வைத்துக் கொள்கிறது.

பொலிஸ் காவலில் இருந்த ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த மற்றொரு சம்பவம் மட்டக்களப்பிலிருந்து அறிக்கையிடப்பட்டது. ஜூன் 2 ஆம் தேதி இரவு மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் சிஐடியால் கைது செய்யப்பட்ட 21 வயது தமிழ் இளைஞரான சந்திரன் விதுஷன், மறுநாள் இறந்தார். பிரேத பரிசோதனையில் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருளின் நான்கு பாக்கெட்டுகளை விழுங்கியமையே அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டாலும்,  அவரது குடும்பத்தினர் அதை மறுத்தனர். விதுஷனின் தந்தையான கே.சந்திரன் ஊடகங்களுக்கு தனது மகன் பொலிஸ் நிலையத்திற்குள் போதைப்பொருளை விழுங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார். விதுஷனின் கிராமத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விதுஷனை தாக்கியதைக் கண்டனர். இறந்த உடலின் தலை மற்றும் கழுத்தில் தாக்குதல் காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜனநாயகம் பிரச்சாரம் மற்றும் தனிமனித உரிமைகளின் எல்லை

விதுஷனின் மரணம் குறித்து தொடர்ந்து நீதி விசாரணை நடந்து வருகிறதென்றாலும், ஆனால் இவை எதுவும் அவரை திரும்ப அழைத்து வராது. மிகவும் துன்பகரமான விடயம் என்னவென்றால், விதுஷனின் நிலைமை குறித்து தெற்கில் எந்தப் பேச்சும் இல்லை. தெற்கில் உள்ள ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் விதுஷனின் மரணம் குறித்து ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. இது தெற்கில் ஜனநாயக பிரச்சாரம் மற்றும் தனிமனித உரிமைகளின் எல்லையைக் அடையாளப்படுத்துகின்றது. சட்டத்தின் ஆட்சி பற்றிய பிரச்சாரம் கூட சிங்கள மையமாக உள்ளது. பலதரப்பட்ட இந்த ஜனரஞ்சக பிரச்சாரங்கள் அரசியலின் சிறந்த கதைகளில் கவனம் செலுத்தும்போது, துரதிர்ஷ்டவசமாக, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வன்முறைகள் கவனத்தை ஈர்க்கவில்லை. ஜனநாயகத்தின் பிரபலமான பிரச்சாரம் விதுஷனின் மரணத்தில் கவனம் செலுத்தாவிட்டால் அதற்கு ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா?

30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்து பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலப் பிரச்சினை குறித்து தெற்கில் உள்ள மக்கள் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகவும், இடம்பெயர்ந்தவர்களாகவும் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகள் குறித்து கண்மூடித்தனமாக இருப்பதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை. இன உணர்வுகளின் அடிப்படையில் வன்முறை மற்றும் சித்திரவதைகளை மௌனமாக அங்கீகரிக்கும் வரை இந்த கொலைகள் தொடரும். நமது தமிழ் மற்றும் முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளுக்காக தெற்கு ஏன் குரலெழுப்பவில்லை என்று நாம் கேள்வி எழுப்பாதவரை ஜனநாயக பிரச்சாரத்தின் எல்லைகளை ஒருபோதும் மீற முடியாது. ஒரு சமூகமாக நாம் இப்போது எதிர்கொள்ளும் ஒரு பெரிய ஆபத்து இதுவாகும்.

சமூக ஊடகங்களில் எதிர்ப்பு போராட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு அடித்தளம்

இந்த ஆபத்தின் நிழல் சமூக ஊடகங்களில் விழுகிறது. அநீதிக்கு எதிரான போராட்டங்கள் கூட பாதிக்கப்பட்டவரின் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. விதுஷனின் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகும் அளவு அதற்கேற்ப தீர்மானிக்கப்பட்டது. கடந்த மாதம் வெலிகமவில் பயணக் கட்டுப்பாடுகளின் போது நடந்த கொலைக்கு எதிராக பொலீஸார் மீது குற்றம் சாட்டப்பட்டது. அங்கு சி.சி.டி.வி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. எனவே, இந்த சம்பவம் குறித்த தகவல்கள் ஓரளவிற்கு பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டன. அந்த சம்பவத்தில், கொலையில் பொலிசாரின் தொடர்பைக் கண்டறிவது எளிதாகும். விதுஷனின் சூழ்நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் தவிர வேறு யாரும் அவர் பொலிசாரால் தாக்கப்படுவதைக் காணவில்லை. அந்தச் சூழலில், கொலைக்குப் பின்னால் உள்ள உண்மை அம்பலப்படுத்தப்படுவதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட வாய்ப்பே உள்ளது. இருப்பினும், விதுஷனின் மரணம் களனியின் நாகபாம்பு பெற்ற ஊடக கவனத்தை பெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இறுதியில், அவரது விதி ஜனநாயக பிரச்சாரத்தில் ஒரு இடைவெளியை மட்டுமே விட்டுச்செல்கிறது. அது ஏன்? அவர் தமிழர் என்பதாலா?

இதேபோல், தெற்கில் ஒரு பிரபல்யமான பாதாள உலக குழு உறுப்பினரும், போதைப்பொருள் வியாபாரியுமான மதுஷின் தலைவிதியை பொலிசார் முடிவு செய்தனர். அப்போதிருந்து, மேலும் பல பாதாள உலக குழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். பெரும்பான்மையான மக்கள் அதை மௌனமாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது. விதுஷனின் மரணம் அவர் ஒரு தமிழ் இளைஞர் என்ற உண்மையால் மறைக்கப்பட்டது. விதுஷனின் மரணம் மற்றும் தெற்கில் நடந்த இந்த கொலைகள் அரசியலில் ஜனநாயகத்தின் பயங்கரமான சூழ்நிலையை அம்பலப்படுத்துகின்றன. இவை அனைத்தும் இது குறித்த உரையாடலின் அவசியத்தை சமூகத்திற்கு நினைவூட்டுகின்றன. 

විදුෂ් ඝාතනයෙන් මතුවන ප්‍රජාතන්ත්‍රවාදි කතිකාවේ රික්තය

A Vacuum In The Democratic Discourse As Displayed By The Killing Of Vidushan

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts