Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடகங்களின் பங்கு – பகுதி 2

தகவல் அறியும் உரிமையை தெளிவுபடுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஊடகத் துறைக்கு விசேட பொறுப்புண்டு என்ற விடயம் இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவைப் போல தகவல் அறியும் உரிமைக்காக போராடிய சிவில் சமூகம் இலங்கையில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இலங்கை பிரஜைகள் இதனை ஒரு சிறப்புரிமையாகப் பெற்றனர். அரச நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல் அறியும் உரிமை தொடர்பான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, சமூகத்தின் ஒரு பகுதியினர் மட்டுமே அதன் மதிப்பை விளங்கிக்கொண்டுள்ளனர் என்பது நிரூபணமாகின்றது. தகவல்களை பெறும் செயற்பாட்டின் தரம் திருப்தியளிக்கவில்லை. எனவே, தகவல் அறியும் உரிமை மற்றும் அதனை அர்த்தமுள்ள ரீதியில் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சமூகத்திற்கு தெளிவுபடுத்துவது ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் கடமையாகும்.

அரச நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக தகவல் அறியும் உரிமை செயற்படப் போவதில்லை. இது அரச அலுவலகங்களின் பணிகளை நடைமுறைப்படுத்துவதோடு அணுகுமுறைகளின் அடிப்படையில் சாதகமான மாற்றங்களுக்கு பங்களிப்புச் செய்கின்றது. தகவல்களை வெளிப்படுத்தாமல் வைத்துக்கொள்ளும் கலாச்சாரத்தை அரச சேவை நீண்ட காலமாக கொண்டிருந்தது. இப்போது தகவல்களை வெளிப்படுத்தும் புதிய கலாச்சாரம் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. எளிதில் பெறமுடியாமல் காணப்பட்ட விடயங்களின் தரவுகள் தொடர்பான பல தகவல்களை மக்கள் கோரலாம். தகவல்களை வழங்காமல் நிறுவனங்கள் நிராகரித்தால் மேன்முறையீடு செய்யலாம். சட்டத்தின் சரத்துக்களில் காணப்படும் வலிமையால் மட்டுமன்றி தகவல் அறியும் உரிமை ஒரு சக்திவாய்ந்த உரிமையை நிரூபிக்கின்றது. அதனை பயன்படுத்துவதற்கான வலுவான முன்னுதாரணங்களும் அவசியம். உதாரணமாக, தனிப்பட்ட பிரஜைக்கு அப்பால் சிவில் சமூகம் முன்னெடுத்த செயற்பாடுகள், இலங்கையின் அடிப்படை உரிமைசார் விடயங்களை விரிவுபடுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் பங்களிப்புச் செய்தன. ஊடகங்களினதும் சிவில் சமூகத்தினதும் பங்களிப்பு ஒரேமாதிரியானது.

எனினும், ஊடகங்களும் சிவில் சமூகமும் மாத்திரம் தனியாக தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்த முடியாது. அந்த உரிமை சட்டபூர்வமாக மக்கள்மயமானது. ஆனால் அதை நிரந்தரமாக மற்றும் நடைமுறையில் மக்களிடம் கொண்டு செல்வது இவர்களின் பொறுப்பாகும். தகவல் அறியும் உரிமை பற்றி பிரஜைகளுக்கு தெளிவூட்டுதல், தனிப்பட்ட மற்றும் சமூக பிரச்சினைகளுடன் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்த பிரஜைகளை ஊக்குவித்தல் மற்றும் வழிநடத்துதல், தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொண்ட மக்களின் வெற்றிகளைப் பரப்புவதற்காக ஊடகத்தில் சந்தர்ப்பம் வழங்குதல் மற்றும் பொதுவான குறிக்கோள்களுக்கு தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தும் சமூக ஆர்வலர்களை ஊக்குவித்தல் போன்ற பல விடயங்களை அவர்களுக்குச் செய்ய முடியும். சிவில் சமூக அமைப்புகளும் ஊடகங்களும் இவ்வாறான பணிகளை ஏற்கனவே செய்தாலும் சமூகத்தின் தேவைகளுடன் ஒப்பிடுகையில் அவற்றின் ஈடுபாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 

 

நான்கு வருட காலத்தின் நிலைமை

தகவல் அறியும் உரிமையை கடந்த நான்கு வருடங்களில் ஊடகவியலாளர்கள் பயன்படுத்துகின்றமை தொடர்பாக கவனம் செலுத்தினால், ஒருசில ஊடகவியலாளர்கள் மாத்திரமே இந்த சிறப்புரிமையை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவருகின்றது.  எவ்வாறாயினும், ஒரேயொரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் மூலம் பெற்றுக்கொண்ட எளிய தகவலின் அடிப்படையில் அறிக்கையிடல்களை மேற்கொள்கின்றமை தொடக்கம் பல தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களின் மூலம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நீண்ட காலமாக பெறப்பட்ட விரிவான தகவல்களின் அடிப்படையிலான புலனாய்வு அறிக்கையிடல்கள் வரை நடைமுறையில் காணப்படுவதை அவதானிக்கலாம். இந்த ஊடகவியலாளர்கள் தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்போது தகவல்களைத் தேடுவதை கைவிட மாட்டார்கள். மேலும் அவை சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்குகின்ற நிலையில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்கின்றனர். இதனால் தகவல் அறியும் உரிமையை விரிவுபடுத்துவதற்கு அவர்கள் மகத்தான பங்களிப்பை வழங்குகின்றனர். தமிழ் மொழியில் தகவல்களைக் கோரும் ஊடகவியலாளர்கள் அரசகரும மொழிக் கொள்கையின் நடைமுறை யதார்த்தத்தில் வெற்றிகரமாக கவனம் செலுத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள்

ஊடகவியலாளர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே தகவல் அறியும் உரிமையை ஊடகவியலின் கருவியாக பயன்படுத்தியுள்ளனர். ஊடக அமைப்புகளின் தூண்டுதல் அல்லது பணிகள் காரணமாக அன்றி அவர்கள் தமது சொந்த ஆர்வத்தால் ஊக்குவிக்கப்பட்டார்கள். சில ஊடக நிறுவனங்கள் தமது ஊடகவியலாளர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமை பரிதாபகரமானது. ஊடகங்களின் உள்ளடக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதில் கவனக்குறைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதே சந்தர்ப்பத்தில் ஊடக நெறிமுறைகள் தொடர்பான சிக்கல்களும் இந்நிலையில் பங்களிப்புச் செய்கின்றது. சில சந்தர்ப்பங்களில், புலனாய்வு அறிக்கையிடலுக்காக ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட கடின உழைப்பு பாராட்டப்படுவதில்லை.

ஊடகங்களும் சிவில் அமைப்புகளும் தகவல் அறியும் உரிமையைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றன. ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதோடு அதனை தமது அறிக்கையிடல்களின் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இத்தகைய பின்னணியில், தகவல் அறியும் உரிமையை அரசு சாரா நிறுவனங்களின் நிகழ்ச்சித்திட்டமாக கருதும் சில ஊடக நிர்வாகிகளின் கசப்பான அனுபவத்தை ஊடகவியலாளர்கள் பெற்றுள்ளனர். தகவல் அறியும் உரிமையை கடந்த ஆட்சியின் நிகழ்ச்சித்திட்டமாக சமீப காலம் முதல் கருதும் சில அரச மற்றும் அரச சார்பு ஊடகங்கள், தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் அறிக்கையிடுவதை தடுக்க முயற்சிக்கின்றன. இந்த சவால்கள் பற்றி நாம் வெளிப்படையாக கலந்துரையாட வேண்டும். இது தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்கவும் அதனை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts