சமூகம்

ஓற்றுமைக்கு எடுத்துக்காட்டு: மிகிந்தலை அசோகபுரம்!

உபுல் தம்மிதா
இன அடிப்படையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள் கலப்பு சமூகமாக வாழ வேண்டும். எங்களுக்கிடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் நாம் இந்த அசோகபுரவில் 40 வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம்….
இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற ‘இனம்’ பிளவுகளுக்கு முக்கியமான அடிப்படையாக அமைவதில்லை. இன ரீதியான நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கான ஒரு பலமான கருவியாக இனம் பயன்பட வேண்டும். பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் ஒரே சமூகமாக இணைந்து வாழ்வது போன்று முஸ்லிம்களும் தமிழர்களும் நெருக்கமாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அசோகபுர என்ற கிராமம் சிறந்த உதாரணமாகும்.
“இன அடிப்படையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள் கலப்பு சமூகமாக வாழ வேண்டும். எங்களுக்கிடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் நாம் இந்த அசோகபுரவில் 40 வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம்.” என்று ஐ.ஏ. அஜித் நிசாந்த என்ற 40 வயதுடைய கிராமவாசி கூறுகின்றார். மிகிந்தலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள அசோகபுர கிராமத்தில் அவர் ஒரு சிறிய வியாபாரியாவார்.


         ஆனந்த தேரர்

அவர் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட இன வன்முறைகள் மற்றும் பதற்றமான நிலைமைகள் காரணமாக திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒருவராவார். மிஹிந்தலை அசோகபுர பிரதேசம் அமைந்துள்ள இடம் முன்னர் தேக்கு மரங்கள் நட்டு வளர்க்கப்பட்ட அரசாங்க காணி. அவர் இடம்பெயர்ந்து வந்த நாளில் இருந்து இங்குதான் வாழ்ந்து வருகின்றார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ‘கம் உதாவ’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.
“நான் இளைஞனாக இருந்த போது என்னால் மிகவும் நேசிக்கப்பட்ட எனது குடும்பமும் இன்னும் சில குடும்பங்களும் இப்பகுதிக்கு இடம் பெயர்ந்தோம். இங்கு அதிகமாக இருப்பவர்கள் சிங்களவர்களே. அத்துடன் சிங்களம் பேசக்கூடிய தமிழ் கிறிஸ்தவர்களும் இங்கு வாழ்கின்றனர். இன்று இந்தக் கிராமத்தில் இருப்பவர்களில் அதிகமானவர்களுக்கு சிங்களம். தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் சாரளமாக பேசமுடியும். இப்போது இங்கு 400 குடும்பங்கள் அளவில் வாழ்கின்றனர். அவர்களில் 100 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாவர். நாங்கள் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றோம்” என்று கூறுகிறார் நிசாந்த.
“நாங்கள் இன அடிப்படையில் பிளவுபடவில்லை. நாங்கள் இங்கு வந்து குடியமர்ந்த காலப்பகுதியில் ஒரு அரச மரக் கண்டுடன் ஒரு வணக்க ஸ்தலம் இங்கு இருந்தது. கிறிஸ்தவர்களுக்கு ஒரு தேவாலயம் இருக்கவில்லை. அதனால் பௌத்த வணக்கஸ்தலம் அமைந்திருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கிறிஸ்தவர்களுக்கான ஒரு தேவாலயத்தை நிர்மாணித்தோம். அதுவும் பௌத்த விகாரைக் காணியிலாகும். இரண்டு ஆலயங்களும் பின்னர் நல்ல முன்னேற்றம் அடைந்தது. ஒவ்வொரு கிறிஸ்தவர்களாலும் பௌத்த விகாரையில் இருந்த பிக்குகளுக்கு தினமும் தானம் வழங்கப்பட்டது” என அந்த கிராமத்தில் இன நல்லிணக்கம் பற்றி நிசாந்த விபரித்தார்.

சிங்களவர்களும் தமிழர்களும் அதிக கடவுள் பக்தி கொண்ட வர்களாகவும் ஆண், பெண் என்ற அடிப்படையில் பாகுபாடின்றி ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருக்கின்றனர்.
ஓவ்வொரு வருடமும் தேவாலயத்தில் மிகப் பொரியளவில் திருவிழா நடைபெறுகின்றது. பௌத்த விகாரையில் நடைபெறுவது போன்று இந்த விழாவை சிறப்பாக நடத்த பௌத்தர்களும் கூடவே ஒத்துழைக்கின்றனர். அதனால் கிறிஸ்தவ தேவாலய விழா தினத்தன்று முழுக் கிரமமுமே விழாக் கோலம் பூண்டு ஒற்றுமைப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய செய்தி கேள்விப்பட்டவுடன் இந்த கிராமத்தில் வசிக்கும் நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். இந்தக் குண்டு வெடிப்பால் நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் இந்த கிராமத்தில் உள்ளனர். அவர்களுக்காக எங்களது கவலையை வெளிப்படுத்தும் வகையில் நாம் இந்த கிராமம் பூராவும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டோம். அத்துடன் விகாரையில் போதி பூஜையும் நடத்தினோம். பாதிக்கப்பட்ட மக்;களுக்காக நாம் உதவிகளை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தோம். விகாரை பிக்குவும் தேவாலயத்தின் ஆயரும் இணைந்து சமாதனத்தை வலியுறுத்தி செய்திகளையும் விடுத்தனர்” என சமாதானம் மற்றும் சக வாழ்வு, நல்லிணக்கம் ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிரான அந்த கவலையான நிகழ்வை எவ்வாறு சமாளித்தனர் என்பது தொடர்பாக விபரிக்கையில் நிசாந்த விளக்கினார்.


                 தேவாலயம்

அசோகாராமய விகாரையின் பிரதம சங்கநாயக்க தேரரான கந்தளை ஆனந்த தேரர் இந்த விகாரையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார். தற்போது பாதிக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகள் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பிவிட்டதாக அவர் திருப்தி தெரிவித்தார்.
“இந்தக் கிராமத்தில் வாழுகின்ற சிங்களவர்களும் தமிழர்களும் அதிக கடவுள் பக்தி கொண்ட வர்களாகவும் ஆண், பெண் என்ற அடிப்படையில் பாகுபாடின்றி ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருக்கின்றனர். ஞாயிறு தினங்களில் நடைபெறும் பிரிவேனா தஹாம் பாடசாலைக்கு கிறிஸ்தவ குழந்தைகளும் வருகின்றனர். அதே போன்று பௌத்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றுகின்றனர். மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ள நிலையில் இங்கு சகவாழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. ஆயர் எரிக் மற்றும் ஆயர் சரத் ஆகியோர் கிராமத்தில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். கிராமத்தில் சமாதானம் வலுவடைந்து இருக்கின்றது என்றே கூறலாம். மக்கள் ஓரளவிற்கு பொருளாதார ரீதியாகவும் பலமடைந்துள்ளனர். இன்று இந்தப் பகுதியில் இருந்து சிறந்த தச்சர்களை நாம் அனுப்பி வருகின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மிகவும் காருண்யம், மனித நேயம் உடையவர்களாக இருக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் கிறிஸ்தவ மக்கள் பாதிக்கப்பட்ட போது இங்குள்ள கிறிஸ்தவர்கள் துயரத்தில் ஆழ்ந்து போயிருந்த சந்தர்ப்பத்தில் ஏனைய மதத்தவர்கள் உதவிகளை வழங்கி அவர்களை கவனித்துக் கொண்டனர். மத மற்றும் இன அடிப்படையிலான வேறுபாடுகள் காரணமாக பிளவு பட்டிருந்த மக்களுக்கு ஆறுதல் வழங்கும் இடமாக இந்தக் கிராமம் மாறி இருக்கின்றது. எமது மக்கள் வெளிப்படுத்திய உணர்வு பூர்வமான நடவடிக்கைகளால் அன்றைய தினம் உண்மையான நல்லிணக்கம் சகவாழ்வு என்ன என்பதை நாம் மிகவும் தெளிவாக காண முடிந்தது” என்கிறார் ஆனந்த தேரர்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts