கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஊடக பயன்பாட்டிற்கு ஊடக ஒழுக்கக் கோவை அத்தியாவசியம் – அது வசிய மாலையல்ல

ஜயசிரி ஜயசேகர

“ஊடக ஒழுக்கக்கோவை” என்பது அண்மைக்காலம் வரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த ஒரு தலைப்பாகும். அது பெரும்பாலும் ஊடகத்தின் தராதரம், சமூக செயற்பாடு தொடர்பாக ஆர்வம் காட்டக்கூடிய உயர் வகுப்பினரின் உரிமையாக கருதப்பட்டது. ஒழுக்கக்கோவை அச்சு ஊடகத்துறைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக பலரும் கருதி வருகின்றனர். அதனால் அந்த ஒழுக்கக்கோவை தமக்கு சொந்தமானதாக இல்லாததால் அதனை அனாவசியமாக மந்திர மாலையாக கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கருதுகின்றனர்.

ஆனாலும் குறுகிய காலத்தில் இந்த சிந்தனைப் போக்கு தலைகீழாக மாறி இருக்கின்றது. ஊடக ஒழுக்கக்கோவையானது உயர் வகுப்பினர் முதல் சாதாரண மக்கள் அடிமட்ட நிலையில் கருதப்பட்ட கோப்பி கடை வரையில் பேசுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அத்தகைய கலந்துரையாடல்கள் எந்தளவிற்கு சர்வசாதாரண நிலைக்கு சென்றுவிட்டது என்றால் ஊடக பிரபுக்கள் ஜாம்பவான்களுக்கு சாதாரண பொதுமக்கள் ஊடக ஒழுக்கக்கோவை தொடர்பான அனைத்து அம்சங்களையும் சொல்லிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலின்போது தவறானதும் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான அறிக்கையிடல் குறித்து மக்கள் கொதிப்படைந்திருப்பதோடு ஊடகவியலாளர்கள் மீது வன்முறையை பிரயோகித்து பதிலடி கொடுக்க வேண்டும் என்று கருதும் அளவிற்கு நிலைமை மோசமடைந்து இருக்கின்றது.

துர்ப்பாக்கியம் என்னவென்றால் ஊடக சமூகம் இந்த நிலையின் யதார்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாதவர்களாக இருந்து வருகின்றமையாகும். இதன் பிரதிபலனாக அமைவது மக்களால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பை சாதகமாக பயன்படுத்தி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கங்களை அடைந்துகொள்ள சட்டக் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் நிலை உருவெடுப்பதாகும். இந்த விடயத்தில் தற்போது தாமதம் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அத்தகைய ஒரு நிலை உருவாகுவதை தடுப்பதற்கான ஒரே வழியாக அமைவது ஊடக ஒழுக்கக்கோவையை கடைபிடிப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஊடக சமூகத்திற்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும். இந்த பதிவானது அதற்கான ஒரு முன்னுரையாகும்.

உலக வரைபடத்தில் நாம் எங்கிருக்கின்றோம்?

உலகில் ஒழுக்கக்கோவை பற்றிய வாத விவாதங்கள் 1920 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவானதாகும். உலகில் பத்திரிகைத்துறை வளர்ச்சியடைந்து 300 வருடங்களின் பின்னராகும். அத்தகைய கலந்துரையாடல்கள் ஊடாக தொழில்துறையினர் மத்தியில் இருந்து வெளிப்பட்டமை சிறப்பாக அமைவதோடு ஒழுக்கக்கோவை பற்றிய முதலாவது ஆலோசனை அமெரிக்க பத்திரிகை சம்மேளன மாநாட்டில் 1950 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டதாகும். ஒழுக்கக்கோவை என்பது குறிப்பிட்ட ஒரு தொழில் குறித்து அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளாகும். 1961 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கௌரவத்திற்கான சர்வதேச நீதிமன்றம் (International Court of Honor) அதற்கான அடித்தளம் போடப்பட்டது. 1969 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையினருக்கான ஒழுக்கக்கோவை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஊடகவியலாளர்களின் சங்கங்களின் ஒன்றிணைந்த சர்வதேச அமைப்பு (The International Union of Press Association) அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

இலங்கையில் ஊடக ஒழுக்கக்கோவை பற்றிய சிந்தனைக்கு சுமார் 40 வருடங்கள் அளவில் வயதாகின்றது. 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் இலங்கை பத்திரிகைப் பேரவை (அச்சு ஊடகத்துறையினருக்கான) 1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஒழுக்கக்கோவையை வெளியிட்டது. பத்திரிகை பேரவை தொடர்பாக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் அச்சு ஊடகத் தொழில்துறை வளர்ச்சியடைந்து 150 வருடங்கள் கடந்த பின்னராவது ஒழுக்கக் கோவையொன்றை முன்வைத்தமையை இங்கு நினைவு கூற வேண்டும்.  முதலாவது இலத்திரனியல் ஊடகமாக 1924 ஆம் ஆண்டு இலங்கை வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது.  ஆனாலும் வானொலி சேவைக்கென முறையான ஒழுக்கக்கோவை  இல்லாதிருந்தாலும் வானொலி சேவைக்கான முறையான கொள்கையொன்று வகுக்கப்பட்டது 42 வருடங்களின் பின்னராகும். 1966 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சட்டத்தின் மூலம் ஒழுங்குவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1979 ஆம் ஆண்டு முதலாவது தொலைக்காட்சி சேவையாக சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இலங்கையில் தொலைக்காட்சி சேவை அறிமுகமானது. 1982 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் மூலம் தொலைக்காட்சி சேவையின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் வகுக்கப்பட்டன. அதில் இருந்து 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் தொலைக்காட்சி சேவைகளுக்கான ஒழுக்கக் கோவையொன்று முன்வைக்கப்பட வில்லை. 1991 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி சேவைகளும் வானொலி சேவைகளும் ஆரம்பமாகியதுடன் அதுவரை காலமும் இருந்து வந்த இலத்திரனியல் ஊடகங்கள் மீதான அரச ஏகபோகம் இல்லாமல் போய் இலாபம் மற்றும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட  நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இயங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் வளர்ச்சியடையலாயின. கடந்த இரண்டு தசாப்த காலமாக இந்த இலத்திரனியல் ஊடகங்கள் இலங்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தி வந்த போதும் இதுவரையில் ஒழுக்க நெறிக்கோவையொன்று அவற்றுக்காக முன்வைக்கப்படவில்லை. இந்த பிரச்சினை இப்போது ஒட்டுமொத்த ஊடக தொழில்துறைக்கும் சவாலாக அமைந்திருக்கின்றன.

சுயாதீன ஒழுங்கு விதிகளும் சவால்களும்

பத்திரிகைப் பேரவைக்கு மாற்றீடாக 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலான சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட பத்திரிகைப் பேரவையை செயலிழக்கச் செய்வது தொடர்பாக ஊடக சமூகம் மேற்கொண்ட முயற்சிக்கு அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆதரவு வழங்கியதோடு சுய கட்டுப்பாட்டு ஒழுக்கக்கோவைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த ஆட்சி குறுகிய காலப்பகுதிக்குள் வீழ்ச்சி கண்டதுடன் அந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது தடைப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கம் குறுகிய கால இடைவெளியின் பின்னர் மீண்டும் பத்திரிகைப் பேரவையை உயிர்ப்பித்தது.

மறுபுறமாக சுய கட்டுப்பாட்டு ஒழுக்கக்கோவையிலும் ஆரம்பம் முதல் வரையறைகள் காணப்பட்டன. இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் அங்கத்துவத்தை பெறுவதன் ஊடாகவே ஒழுக்கக்கோவையை கடைபிடிப்பதற்கு உடன்படும் பத்திரிகைகள் தொடர்பாகவே இந்த ஒழுக்கக்கோவை ஏற்புடையது என்ற நிலை இருந்து வந்தது. அதன் அரம்ப கட்டத்திலேயே லசந்த விக்ரமதுங்க பிரதம ஆசிரியராக இருந்த சன்டே லீடர் பத்திரிகை இந்த ஒழுக்கக்கோவையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அத்துடன் அந்த சந்தர்ப்பத்தில் வேகமாக வளர்ச்சி கண்டு கொண்டிருந்த இணையத்தள ஊடக செயற்பாட்டையும் இந்த முயற்சியின் கீழ் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்கவில்லை. மற்றுமொரு விடயமாக அமைந்தது இந்த ஒழுக்கக்கோவை வெறும் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட ஒரு வழிகாட்டல் கோவையாக அமைந்ததே தவிர சட்டரீதியான அடிப்படையில் தொழில்நுட்பரீதியாக  அரச அங்கீகாரத்தை பெற்றதாக இருக்கவில்லை.

ஒழுக்கக்கோவையானது ஊடக தொழிலில் இணைவதற்கான உடன்படிக்கையாக அமையாததோடு அதனை மீறும் போது அதன் மூலம் ஊடக தொழிலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவோ அல்லது ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலோ அமையவும் இல்லை. பத்திரிகையின் விற்பனையை அதிகரித்தல், பத்திரிகை நிறுவன உரிமையாளர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக ஒழுக்கக்கோவையின் தொடர்ச்சியான மீறல் சர்வசாதாரண விடயமாக காணப்பட்டது. ஒழுக்கக்கோவையை கவனத்தில் எடுக்காது சலுகைகள், வரப்பிரசாதங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்து செயற்படல், ஊடக நிறுவனங்களில் இந்த ஒழுக்கக்கோவையை கடைபிடிக்கும் ஊடகவியலாளர்கள் நெருக்கடிக்கு முகம் கொடுத்தல் போன்றவை கவலைக்கிடமான நிகழ்வுகளாக இருந்து வந்தன. ஒரு சில பத்திரிகைகளைத் தவிர முழுமையான பத்திரிகைகளால் ஒழுக்கக்கோவையின் அடிப்படையில் செயலாற்றும் தேவை இருக்கவில்லை என்றே கூறலாம். இவ்வாறான பலவிதமான சவால்கள்  கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அதன் இலக்கை அடைந்துகொள்ளும் நோக்கில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவது பாராட்டத்தக்கதாகும். குறிப்பாக பொதுமக்களால் செய்யப்படுகின்ற முறைப்பாடுகளை ஏற்று தீர்வுகளை வழங்கும் செயற்பாடு நடைபெறுகின்றது.

தன்னிச்சையாக செயற்படும் இலத்திரனியல் ஊடகங்கள்

ஒழுக்கக்கோவை தொடர்பாக சிந்திக்கின்ற போது இலத்திரனியல் ஊடகங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. வானொலி சேவைகளின் நிலையை விட தொலைக்காட்சி அலைவரிசைகளின் போக்கு முறைகேடாக அல்லது விரும்பத்தகாத முறையில் இருந்து வருவதோடு அதிலும் தனிப்பட்ட தொலைக்காட்சி சேவைகளின் நடத்தை மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளன. தனியார் தொலைக்காட்சி சேவைகளுக்கு ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டங்களுக்கு உடன்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும் ஊடக நிறுவன உரிமையாளர்கள், பிரதானிகள் ஆகியோர் அவற்றை தமது கண்களால் கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்ற நிலையே இருந்து வருகின்றது. பொதுச் சொத்தான ரூபவாஹினியின் ட்ரான்ஸ் மிசனை பயன்படுத்த அனுமதி வழங்கும் முறையில் நியாயமான முறையொன்றை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஊடக துறை சார்ந்த நிபுணர்கள் நீண்ட காலமாக விடுத்து வந்தாலும் தொடர்ச்சியாக அது அரசியல் நட்பின் அடிப்படையில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சலுகையாக இருந்து வருகின்ற கொடுக்கல் வாங்களாகும். ஊடக நிறுவனங்கள் அனைத்தும் கோட்பாட்டு அடிப்படையிலானதும் பண்பாட்டு ரீதியானதுமான அனைத்து விதிமுறைகளையும் மீறும் வகையில் நடந்துகொள்வதற்கு இத்தகைய முறைகேடுகளுக்கு ஒரு காரணம் என்று கூறலாம். அத்துடன் இவ்வாறு முறைகேடாக செயற்படுவதானது அவர்களின் நீடித்த உழைப்புக்கு சவாலாகவும் அமையவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றின் பிரதானிகளான உரிமையாளர்களுக்கு அரசாங்க மட்டங்களில் உயர் பதவிகள் கிடைப்பதற்கும் வழிவகுப்பதற்கான தகைமையாகவும் அமைந்திருக்கின்றது.

சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் இலத்திரனியல் ஊடகங்களை கண்காணிப்பதற்காக ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் என்ற சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்கவில்லை. ஊடகங்களை நியாயமான கண்காணிப்புக்கு அப்பால் சென்று ஊடக அடக்குமுறையை மேற்கொள்ளும் தேவையை அரசாங்கம் அடைந்து கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி அதற்குள் இருந்து வெளிப்பட்டது. ஊடக கண்காணிப்புக்காக சுயாதீனமான ஆணைக்குழுவொன்று ( தேர்தல் ஆணைக்குழு மூலம்) ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஊடக மறுசீரமைப்பை ஆதரிக்கும் தரப்பினரின் அபிலாசையை அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தின் மூலம் அடைந்துகொள்ள முடியாமல் போனது.

அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் இலங்கையானது ஜனநாயக மறுசீரமைப்பு தொடர்பான தேவை குறித்த அபிலாசையில் இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பை முற்றாக சுருட்டிக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பமாகும். ஆனாலும் ஊடக மறுசீரமைப்பு மற்றும் அதற்கான கலந்துரையாடல் என்ற ஊக்குவிப்புக்கான ஈடுபாடு (Advocacy) மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையிலான ஊக்குவிப்பு இன்னும் இருந்து வருகின்றது. இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயமாக அமைவது புது ஊடகங்களின் விரைவான வளர்ச்சிக்கு முன்னாள் மரபு ரீதியான ஊடகங்களுக்கான சவால்களை சந்திப்பதற்கான பலமான வரவேற்பு இருந்து வருவது  அவை உயர் தராதரத்தை உடைய ஒழுக்கக்கோவையை கடைபிடிப்பதால் ஆகும். அதற்கான முயற்சியாக ஊடக சமூகத்திற்குள் இருந்து பலமான தேவையை வெளிப்படுத்துவதோடு ஊடக தொழில்துறையின் தொழில் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான அத்தியாவசியமான உடன்படிக்கையும் ஆகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts