ஜூட் ஆர். முத்துக்குடா
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ஊடகங்களின் செயற்பாடுகள் பெரிதும் காரணமாக அமைகின்றன. இவற்றில் சில, முரண்பாடுகளை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தவறான தகவல்களாகும். அதே சந்தர்ப்பத்தில் தெரிந்தோ தெரியாமலோ வெளியிடப்படும் போலிச் செய்திகள் ஆகும்.
மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் பொறுப்புடன் அறிக்கையிட வேண்டிய அவசியம் ஊடகவியலாளர்களுக்கு உண்டு. எனினும், துரதிஷ்டவசமாக அதுகுறித்து கவனம் செலுத்துவது இப்போது குறைந்துவிட்டது. ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக அறிக்கையிடும்போது, குற்றமே அங்கு முக்கிய காரணியாகும். மாறாக குற்றமிழைத்தவரின் இன அடையாளம் அங்கு அவசியமில்லை. அதேபோன்று, உரிய ஆதாரங்களின்றி ஒருவரை பயங்கரவாதியென முத்திரை குத்துவதையும் தவிர்க்க வேண்டும். எவ்வாறாயினும், இவ்வாறான விடயங்கள் இப்போது ஊடகங்களில் சாதாரணமாகிவிட்டது.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, யாழ். மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஒரு பாதுகாப்புப் பிரிவை அமைத்தார். குறித்த பாதுகாப்புப் பிரிவின் சீருடையானது, தற்போது செயற்பாட்டில் இல்லாத தமிழீழ விடுதலைப் புலிகளது பொலிஸ் பிரிவின் சீருடையை ஒத்ததாக அமைந்துள்ளதென்ற கருத்தை சமூகத்தில் உருவாக்க ஊடகங்கள் முயற்சித்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எந்த சின்னமும் குறித்த சீருடையில் இல்லை. எனினும், சமூகங்களிடையே தவறான புரிதலை உருவாக்குவதற்கு செய்தியாளர்கள் முயன்றனர். மேயரின் செயற்பாடு சட்டபூர்வமானதா என்பதை பொலிஸ் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். அத்தோடு, சமூகங்கள் சந்தேகிக்கும் வகையிலான அறிக்கையிடல்கள் தீங்கு விளைவிக்கும்.
முப்பது வருடகால யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தபோதும் இன நல்லிணக்கம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. சமூகங்களிடையே தவறான புரிதல்கள் காணப்படுகின்றன. நல்லிணக்கம் என்பது சமாதான சின்னத்தில் காணப்படும் புறாவைப் போன்று வெண்மையானதல்ல. எமது இருப்பிற்கு நல்லிணக்கம் அவசியம். எனவே, நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்கும் முயற்சிகளை தோற்கடிக்க நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால், போலிச் செய்திகளும் பிரச்சாரங்களும் எமது அழகிய தாய்நாட்டை மீண்டும் ஒரு இரத்தக்களரிக்கு இட்டுச்செல்லும்.